தமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துள்ளது. அப்போது விதியை மீறி விளையாடியதாக தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது பஞ்சாப் அணியிணர் தமிழக வீராங்கனைகளை தாக்கியுள்ளனர். நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு நாற்காலிகளை தூக்கி சண்டையிடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் இதேபோல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவர்களுக்கான கபடி போட்டியின் போது தமிழக வீர ர்கள் மீது ராஜஸ்தான் அணியினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.