உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள்!
வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
வரலாறு காணாத கனமழை காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் அரசு வழங்கியது.
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தபோது நேரடியாகவே முதலமைச்சர் முக ஸ்டாலின், நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது.
வெள்ள பாதிப்புகளுக்கான மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.19,692 கோடி உடனே வழங்க வேண்டும் எனவும் எம்பிக்கள் குழு வலியுறுத்த உள்ளது.
இதுபோன்று, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்கு ரூ.18,214 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி கோரி அரசு சார்பில் 2 மனுக்கள் அளித்த பிறகும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை நிதி பெறப்படவில்லை என அரசு தரப்பில் குற்றசாட்டியுள்ளனர்.