For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து தமிழ்நாடு வேறு வழிகளில் வெற்றி பெறுகிறது" - நியூயார்க் டைம்ஸ் புகழாரம்...

08:22 PM Feb 02, 2024 IST | Web Editor
 மொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து தமிழ்நாடு வேறு வழிகளில் வெற்றி பெறுகிறது    நியூயார்க் டைம்ஸ் புகழாரம்
Advertisement

ஒட்டுமொத்த இந்தியா மாநிலங்களும் பயணிக்கும் பாதையை தவிர்த்து தமிழ்நாடு வேறு வழிகளில் பயணித்து வெற்றி பெற்று வருகிறது என நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தமிழ்நாட்டை புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில், தொழில் மயமாக்கலை பொறுத்தவரை தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதிலும், பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் மற்றும் சர்க்கரை போன்ற உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து முன்னணியில் தமிழ்நாடு இருந்து வருகிறது. அண்மையில், தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்றுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் தமிழ்நாட்டின் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளது.

அந்த கட்டுரையில், “நீண்ட காலமாக ஐபோன் உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகித்து வரும் தைவானைச் சேர்ந்த Foxconn நிறுவனம், தனது 99 சதவீத ஐபோன் உற்பத்தி வணிகத்தை சீனாவில் மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணியில் Foxconn நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் Zhengzhou நகரில் உள்ளது போல தனது ஊழியர்களுக்கு பிரமாண்டமான தங்குமிட வளாகங்களை கட்டி வரும் Foxconn, ஒவ்வொரு தளத்திலும் 24 அறைகள் கொண்ட 13 கட்டிடங்களை அமைத்து வருகிறது.

சீனாவை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறி தங்களது உற்பத்தியை பிற நாடுகளில் விரிவுபடுத்த நினைக்கும் போது அந்த நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவில் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்களில் சுமார் 13 சதவீத சாதனங்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதாகும். அதில் நான்கில் மூன்று பங்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அடுத்த ஆண்டுக்குள், இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் அளவு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் ஊக்குவிக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருந்தபோதிலும், நாட்டில் உற்பத்தியில் பெரிதும் முன்னேற்றம் இல்லை. 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது இருந்ததை விட உற்பத்தி 16% குறைவாக உள்ளது. இது சீனா, ஜப்பான், தைவான் மற்றும் தென் கொரியாவை விடவும் இது மிகவும் குறைவு.

இந்தியாவிற்கு மிகவும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வகையான வேலைகள் தேவைப்படுகின்றன. தொழிற்சாலை வேலை தவிர வேறு வேலைகள் எதுவும் அங்கு இல்லை. கடந்த ஆண்டு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்தியது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய, மக்களின் எண்ணிக்கை வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் அந்த மக்கள்தொகை வீக்கத்தை நன்மையாக மாற்றுவது, இந்தியாவின் தொழிலாளர்களை அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக மாற்றுவதாகும். இந்தியர்களில் பாதி பேர் சிறு விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

இந்தியாவில் முன்னோக்கி செல்லும் பாதையாக தமிழ்நாட்டில் பாதையை சுட்டிக்காட்டலாம். 7 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு தற்போது தொழில் துறையில் வெற்றிபெற்று வருகிறது. இந்திய அரசாங்கம் 2021-ம் ஆண்டில் டெல்லி, நொய்டா போன்ற மாநிலங்களில் மின்னணு உற்பத்திக்கு மானியம் வழங்கத் தொடங்கியது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த ஊக்கத்தொகை அவசியமாக கருதப்படவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து வேறு வழிகளில் தமிழ்நாடு பயணித்து வெற்றி பெற்று வருகிறது.தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே தொழில்துறையில் சாம்பியனாக செயல்பட்டு வருகின்றன. சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் die-casting மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் நிபுணத்துவம் பெற்றவை.

அமெரிக்காவை சேர்ந்த Corning நிறுவனம் ஐபோன் சாதனங்களுக்கு தேவைப்படும் கொரில்லா கிளாஸ் பாகத்தை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Vinfast நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை தயாரிக்க $2 பில்லியன் முதலீடுகளை அறிவித்துள்ளது. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களை மட்டும் ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி ஆர்.பி.ராஜா, துறை அதிகாரிகளுடன் இணைந்து மலிவு பொருட்கள் முதல் அனைத்து விதமான உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இதுகுறித்து பேசிய போது “எங்கள் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் நாங்கள் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை" என்று கூறினார். தொழிலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிடுகிறோம். ஸ்காண்டிநேவிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பலர், மாநிலம் கட்டமைத்துள்ள மனித மூலதனத்திற்காகவும், குறிப்பாக மாநிலத்தின் பெண்களுக்காகவும் பெருமைப்படுகிறார்கள். அவர்களில் பலர் முறையான வேலைகளை செய்கிறார்கள். மொத்த இந்திய பெண் தொழிற்சாலை ஊழியர்களில் 43% பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள். இது தேசிய மக்கள் தொகையில் 5% ஆகும்” இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளது.

- க.திருப்பதி

Tags :
Advertisement