'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' - தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
தவெக தலைவர் விஜய் நாளை தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். தவெகவின் சுற்றுப்பயணத்திற்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மரக்கடையில் பேச அனுமதிக்கப்பட்ட இடம் வரை காருக்குள் இருந்துதான் பயணம் செய்ய வேண்டும், பிரசார வேனில் நின்றபடி பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் சுற்றுப் பயணத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளனர்.
போலீசாரின் நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தவெக தலைவர் விஜய்யின் பிரசார சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை த.வெ.க.வினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நாளை தொடங்கும் விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், தவெகவின் பிரசார லோகோவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். அந்த லோகோவில் 'உங்க விஜய் நா வரேன்'. 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது'. 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.