துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!
துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய வழக்கு மீதான விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் மிக மிக அத்தியாவசியமான வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உள்ளது.
ஆனால் அரசியல் சாசன கேள்விகள் எழக்கூடிய இந்த முக்கியமான வழக்கில் அவசர அவசரமாக விடுமுறை கால அமர்வானது இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கொடுத்திருந்த இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவை பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது.
மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு தன்னுடைய பிரதிவாதங்களை, நியாயமான விஷயங்களை எடுத்து வைக்கும் வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை கால அமர்வானது தன்னுடைய பணி நேரத்தை தாண்டி மாலை 6:30 மணி வரை சம்மந்தப்பட்ட மனுவை விசாரித்து அவசர அவசரமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோடைகால விடுமுறைக்கு முன்பாக உரிய கால அவகாசம் இருந்தும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாமல் விடுமுறை கால அமர்வின்போது மனுவை தாக்கல் செய்து, அவசர அவசரமாக வழக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வானது கருத்தில் கொள்ளவில்லை.
அதேபோன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்துள்ளதை சுட்டி காட்டிய பிறகும், அதனை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்கள் பல உண்மைக்கு மாறானவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அரசு சுட்டிக்காட்டியதோடு, அது தொடர்பாக உரிய விளக்கங்கள் அளிக்கவும், அரசு தரப்பில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் கூறியபோதும் அதற்கான உரிய கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவில்லை.
மேலும் அரசு தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவால் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.