தமிழ்நாடு DGP நியமன விவகாரம் : 3 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தமிழக டி.ஜி.பி. ஆக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரிவு பொறுப்பு டி.ஜி.பி.-யாக ஐபிஎஸ் உயர் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்காலிகமாக நியமித்தது. ஆனால் தமிழக அரசின் முடிவை எதிர்த்த எதிர்கட்சிகள் முழு நேர டி.ஜி.பி.யை நியமிக்க வலியுறுத்தின.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய காவல்துறை டிஜிபி நியமனம் செய்யாமல் பொறுப்பு டி.ஜி.பி நியமித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹென்றி திபேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, காவல்துறை டிஜிபி விரைந்து நியமிக்க உத்தரவிட்டது. குறிப்பாக யுபிஎஸ்சி பரிந்துரை கிடைத்தவுடன் உடனடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் காவல்துறை டிஜிபி பெயரை இறுதி செய்து யுபிஎஸ்சி தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய நிலையில் புதிய டிஜிபி நியமனம் செய்யப்படாமல் உள்ளது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவமதிப்பு மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.