ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரிய பூஜை விழா - ஏராளமான பத்தர்கள் பங்கேற்பு!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கோவில்பத்து பகுதியில் ஸ்ரீராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒரு வாரத்திற்கு மாலை நேரங்களில் சூரிய ஒளி மூலவர் மீது நேரடியாக விழும்.
இதன் காரணமாக ஸ்ரீசூரிய பகவான் பூஜித்த சுயம்வர தவஸ்வினி அம்மாள் சமேத ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் அருகில் அமைந்துள்ள ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரியபகவான் ஸ்ரீராஜகணபதியை சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதாக கருதப்படும்.
இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் சூரிய பூஜை விழாவாக ஒரு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று (மார்ச் 21) மாலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீராஜகணபதி மீது விழுந்த போது விநாயகருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து பல வண்ண மலர்கள் மற்றும் அருகம் புல் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.