ஆரோவில் கட்டுமானப் பணிகளுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்!
அரோவில் நகர் வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகளுக்கு நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நவரோஸ் கெர்சாப் மோடி என்பவரால் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கட்டுமானத்திற்கு முன் கூட்டியே சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும் எனக்கூறி கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பெலா.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சுத்தமான சுற்றுசூழல் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது முக்கியமானது. ஆரோவில் கட்டுமான விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உரிய முறையில் ஆராயமல் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அந்த தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது