திடீரென்று திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் - கருணை கொலை செய்யக் கோரி முழுக்கம்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர் வட்டாட்சியரிடம் அறிவுறுத்தியும் இதுவரை இலவசப் பட்டா வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி இன்று மதியம் 3.15 மணியளவில் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தனம் என்ற திருநங்கை தலைமையில் மது, அகிலா, தமன்னா, மெகதி உள்பட 6 திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம் மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கபட்டது.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ள திருநங்கைகள் அடிப்படை வசதிகள் உள்பட வீட்டு மனை பட்டா எதுவும் வழங்காததால் ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவை வேண்டாம் என்று கிழித்து தூக்கி எறிந்தனர். மேலும் குடியிருக்க வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்காததால் கருணை கொலை செய்யுமாறு முழக்கம் எழுப்பியபடி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.