பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் - சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியில் அரசு உதவி பெறும் KKR.TDTA உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் முத்துக்கிருஷ்ணன். பழங்குடியின மாணவரான இவர் இன்று(ஜூன்.24) ஆசிரியர்கள் திட்டியதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் எழுதிய கடித்தத்தில், தனது இறப்புக்கு பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து மொத்தம் நான்கு ஆசிரியர்கள்தான் காரணம் என கூறியியுள்ளார். இது குறித்து முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர்கள் சாதி சான்றிதழ் கொடுக்க அலைக்கழித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட ஆசியரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை சத்யஞானசுந்தரி, மற்றும் வளர்மதி, பியூளா, மேரி உட்பட 4 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதே போல் இந்த ஆசியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.