For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முன்னேற்பாடுகள் தீவிரம்” - நிர்மலா சீதாராமன்!

09:15 AM Jun 23, 2024 IST | Web Editor
“பெட்ரோல்  டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முன்னேற்பாடுகள் தீவிரம்”   நிர்மலா சீதாராமன்
Advertisement

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் என்ன விகிதத்தில் ஜிஎஸ்டி விதிப்பது என்பதை மாநிலங்களே ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் நேற்று (ஜூன் 22) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி அமைத்த ஜிஎஸ்டி தொடர்ந்து மெருகேற்றப்படும் அவசியம் இருக்கும் காரணத்தால் ஜிஎஸ்டி குறித்து முடிவெடுக்கும் உச்சக்கட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளதரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் வானூர்திகளின் பாகங்கள், பரிசோதனைக் கருவிகள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு சீரான விகிதத்தில் 5% ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி விதிக்க வேண்டும், அனைத்து எஃக்கு, இரும்பு மற்றும் அலுமினிய பால் கேன்கள் மீது 12% ஜிஎஸ்டி விதிக்க வேண்டும், அட்டைப் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டியை 18%ல் இருந்து 12%மாக குறைக்க வேண்டும், சோலார் குக்கர்களுக்கு 12% ஜிஎஸ்டி, நடைமேடை அனுமதி சீட்டுகள், காத்திருப்பு அறைகள், உடைமைகள் பாதுகாப்பு அறை, பேட்டரி கார் சேவைகள் என பொதுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சேவைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிப்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் அளித்தது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு பல்வேறு மத்திய, மாநில வரிகளை ஒன்றிணைத்தபோது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவையும் ஜிஎஸ்டி சட்டத்தில் சோ்க்கப்பட்டன. ஆனால், அவற்றின் மீது பிற்காலத்தில் ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் மீது என்ன விகிதத்தில் ஜிஎஸ்டி விதிப்பது என்பதை மாநிலங்களே ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக, 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகைகள், உரிய நேரத்தில் வரிப் பகிர்வு, நிதிக்குழு மானியங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிப்பதை நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்” என்று மத்திய நிதியமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Advertisement