நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் ஏன்? காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையான மற்றும் அவமானகரமான செயல் ஆகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மக்களவை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதிருந்த சிலைகளின் அமைப்பினால், பார்வையாளர்கள் வசதியாக அவற்றை பார்வையிட இயலவில்லை. இந்த காரணத்தினால் தான், அனைத்து சிலைகளும் மிகவும் மரியாதைக்கு உரிய முறையில் பிரேர்னா ஸ்தல் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடம், நாடாளுமன்றத்தை பார்வையிட வருவோர், சிலைகளைப் பார்க்க வசதியான முறையில் மாற்றியமைக்கப்படவிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மக்களவைச் செயலாளர் அளித்திருக்கும் விளக்கம் வெறும் மோசடி. இது நடவடிக்கை குறித்து ஆளும் கட்சி, எந்த அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.