"எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை... திமுக அரசு மீது பாய்கிறார்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,
"1974-ல் அவர் அடிக்கல் நாட்டிய இந்த வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவர் சிலையும், திருவாரூர் தேரும் அமைந்துள்ள இந்தக் கோட்டம், தலைவர் மு.கருணாநிதியின் கனவுப் படைப்பு. இந்தக் கலைக் கருவூலத்தைதான் நாம் இப்போது 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திருக்கிறோம். பொதுவாக, திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் என்று சொன்னால், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுவிடுவார்கள். நாம் உருவாக்கிய கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள். அப்படி கவனிப்பார் இல்லாமல் இருந்த இந்த வள்ளுவர் கோட்டத்தை, இப்படி புதுப்பொலிவோடு மீட்டெடுத்து இருக்கிறோம்.
அதை செய்து காட்டிய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நான் மனதார பாராட்டுகிறேன். தலைநகர் சென்னையின் மைய மண்டபமாக ஆயிரத்தி 400 பேர் அமரக்கூடிய மாபெரும் கூட்ட அரங்கத்தோடு அமைந்திருக்கின்றது. இந்த தமிழ்க் கோட்டத்தை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன். பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை. உங்கள் அன்புக்காகதான் நான் பங்கெடுத்திருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த நம்முடைய மா.சுப்பிரமணியனுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளான நீங்கள் மு.கருணாநிதியின் உள்ளத்தில் எப்போதும் நிறைந்தவர்கள். நாம் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மு.கருணாநிதி "உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று சொல்வாரே அந்த பாச உணர்வுடன் வந்திருக்கிறேன்.
கோரிக்கைளையும் வேண்டுகோளாகவும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் என்றும் நான் உங்களில் ஒருவன். உங்களுக்கான அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே இது, எனது அரசு அல்ல; நமது அரசு என்று சொன்னேன். "வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வோம்" என்று சொன்னேன். அதனால்தான், எல்லாருக்கும் எல்லாம் என்ற பொருள்பட திராவிட மாடல் அரசு என்று நம்முடைய அரசுக்கு பெயர் வைத்தேன். திராவிட மாடல் என்றால், சமூகநீதி சமத்துவம் சமதர்மம் சகோதரத்துவத்தை காக்கக்கூடிய அரசு. ஏழை எளியவர்கள் விளிம்புநிலை மக்கள் ஒடுக்கப்பட்டோர் ஒதுக்கப்பட்டோர் பெண்கள் இளைஞர்கள் முதியோர் மாற்றுத் திறனாளிகள் - திருநர் என்று அனைவரையும் உள்ளடக்கிய அரசு இது.
இது ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்வது இல்லை. உள்ளார்ந்த அன்புடன் செய்வது. இன்றைக்கு மாற்றுத் திறனாளிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள், விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். சமூகத் தடைகளை உடைத்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பிறப்பினாலோ, சவால்களை வென்று வருகிறார்கள். உடல்நலக் குறைவாலோ அல்லது விபத்தினாலோ பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பிலிருந்து மீளமுடியும், மற்றவர்களைப் போல நாங்களும் வெல்ல முடியும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறீர்கள்.
இத்தகைய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
“முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்று சொன்னார் வள்ளுவர். முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதை உண்மையில் நிரூபித்து வருகிறவர்கள் மாற்றுத் திறனாளிகள்தான். உங்களுக்கு நான் சொல்வது, உங்களுக்கு நான் இருக்கிறேன், இந்த அரசு இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது என்னுடைய கடமை. இது எல்லாருக்குமான ஆட்சி, எல்லாரையும் முன்னேற்றுகின்ற ஆட்சி. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லோரும் முன்னேறக் கூடாது, எல்லார்க்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது, சமத்துவம் உருவாகக் கூடாது என்று நினைக்கின்ற சிலர் திமுக அரசு மீது பாய்கிறார்கள். அதையெல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது, நீங்களும் - மக்களும் தருகின்ற அன்புதான்."
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.