சிவகங்கை: கல்குவாரி விபத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த மல்லாங்கோட்டை அருகே மெகா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இன்று வேலை செய்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய மற்ற மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர்கள் அர்ஜித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம், முருகானந்தம், என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த மைக்கேல் என்ற தொழிலாளர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த குவாரி முறையான அனுமதியுடன் செயல்பட்டதா? அல்லது சட்ட விரோதமாக இயங்கி வந்ததா? என்று விசாரித்து வருகின்றனர்.