"மசோதாவானது அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரித்து வருகிறது.
அப்போது மத்திய அரசு தரப்பு, ”குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் அரசியல் சாசன பிரிவு 32 மற்றும் 226 ஆகியவற்றை ஆளுநர், குடியரசு தலைவர் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்க மாநில அரசோ அல்லது தனி நபரோ பயன்படுத்த முடியாது”
தொடர்ந்து குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனுவை எதிர்க்கும் தரப்பு,
”அரசியல் சாசனம் 200ல் இருக்கக்கூடிய மூன்று வழிமுறைகள் தான் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்கலாம் அல்லது மசோதாவை சட்டமன்றத்திற்கு திரும்ப அனுப்பலாம் அல்லது மசோதாவை குடியரசுத் தலைவர் முடிவுக்காக அனுப்பி வைக்கலாம் இந்த மூன்று முடிவுகளை தவிர வேறு முடிவுகள் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்றத்தால் மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்படக்கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் ஏனெனில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனம் வகுத்துள்ள வழிமுறை. அரசியல் சாசனம் வழங்கி இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அதன் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநரை பொறுத்த வரைக்கும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியும், உதவியின்படியும் தான் செயல்பட வேண்டும். மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும், ஆளுநரை மாநில முலமைச்சருக்கு மேலானவர் என்று கட்டமைக்கும் வகையிலேயே இருந்தது என்றனர்.
அப்பொது குறுக்கிட்ட நீதிபதி நரசிம்மா,
”ஒருவேளை மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும், அமைச்சரவை ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தும் போது, அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று வினவினார்.
அதற்கு குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனுவை எதிர்க்கும் தரப்பு:-
”அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஏனெனில் அரசியலமைப்பு திட்டம் மாறாது. அதேவேளையில்,சட்டம் தவறாக இருந்தால் அதனை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று ரத்து செய்யப்படும், ஆளுநரை பொறுத்தவரை அவர் நீதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் சாசன பிரிவு 200 படி ஆளுநருக்கு 4 வது வாய்ப்பு என்று ஒன்று இல்லை. காலவரம்பு இல்லாமல் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது, கிடப்பில் போட முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த இருபதுக்கு மேலான மசோதாக்கள் நான்கு ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டதுஇன்றும் 3 ஆண்டுகள் வரை மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. 2 ஆண்டுகள் ஆளுநர் நிறுத்தி வைத்தார். பின்னர் ஓராண்டுக்கு மேல் குடியரசு தலைவர் முன்பு கிடப்பில் உள்ளது” என்று பதிலளித்தனர்.
தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.