For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு : ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி!

01:36 PM Feb 12, 2024 IST | Web Editor
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு   ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி
Advertisement

பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

Advertisement

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டார்.  அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்தார்.  நிகழ்ச்சி முடிந்து ராஜேஷ் தாஸ் காரில் சென்ற போது,  பெண் எஸ்பி ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டார்.  அப்போது ராஜேஸ் தாஸ் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உள்துறை செயலாளர்,  டிஜிபியிடம் பெண் எஸ்பி புகார் அளித்தார். இது தொடர்பாக ராஜேஸ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  மேலும், இது தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்  முன்னாள்  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை  தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  பின், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.  இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இரு வேறு அமர்வுகளில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 24 மற்றும் 29-ஆகிய தேதிகளில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில்,  தண்டனைக்கு எதிராக ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கு 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது.  அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  ராஜேஷ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் பழனி, ரவீந்திரன் ஆகியோர்  நிகழ்வு நடைபெற்ற பகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள்பட்டதால்,  விசாரணையை அந்த மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருவதால்,  தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்க மறுத்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா இந்த மனுவையும், மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து,  தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

இதனிடையே,  பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொலை அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில்,  விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Tags :
Advertisement