பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமான் மீது 60 வழக்குகள் பதிவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில கருத்துக்களை கூறினார். இதுகுறித்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் இதுவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 11 மாவட்டங்களில் 60 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.