கள் இறக்கும் போராட்டத்தில் பனைமரம் ஏறிய சீமான்!
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பங்கேற்று, பனைமரத்தில் ஏறி கள் இறக்கி அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சீமை சரக்குகளை தடை செய்வோம், கள் விற்பனை நிலையங்களை தொடங்குவோம் என்றார்.
கள் விஷம் என்றால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பீர், ரம், விஸ்கி எல்லாம் கோயிலில் கொடுக்கும் தீர்த்தமா என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சுக்கு பதில் அளித்தார். என் வாழ்வியலோடு கலந்த உணவு கள் என்றும், இதனை யாருக்காகவும் விட முடியாது; பனை, தென்னை என்பது விவசாயம். பனை தேசிய மரம்; அதனை இழக்க முடியாது. இன்று கள் இறக்கியதே இங்கு இருக்கும் அச்சுறுத்தல்களை போக்குவதற்காக தான் என்றும் பேசினார்.
அமைச்சர் சேகர்பாபு தாய்மொழி தமிழ் அல்ல என்றும், அவர்கள் தமிழில் குடமுழுக்கு நடத்த மாட்டார்கள் என்றும், நாங்கள் தமிழில் அர்ச்சனை செய்து குடமுழுக்கு நடத்துவோம் என்றும் தெரிவித்தார். முதற்கட்டமாக நேற்று திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளோம்.
இன்று கள் இறக்குவதற்கு போராட்டம், நாளை ஆடு மாடுகளை மேய்ச்சல் தடைக்கு எதிர்த்து போராட்டம் நடத்துவேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.