குன்றத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுனர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார்!
குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மின் கம்பத்தில் மோதி சாலையில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவிகள், சோமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்குச் சென்று தேர்வெழுதி வருகின்றனர். அங்கு தேர்வெழுத வரும் மாணவர்களை அந்த தனியார் பள்ளியின் சார்பில் பள்ளி வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்று, தேர்வெழுதி முடிந்ததும் மீண்டும் அழைத்துச் சென்று மாணவர்களின் பள்ளிகளில் விடுவது வழக்கம்.
அதன்படி, நேற்று தேர்வு எழுதி முடித்த 35க்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி வாகனத்தில் அழைத்து கொண்டு அரசு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை டிரைவர் வடிவேலு (34), என்பவர் ஓட்டினார். அந்த வாகனம் பழந்தண்டலம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த
மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற மாணவிகளை அங்கிருந்து வேறு வாகன மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கவிழ்ந்து கிடந்த பள்ளி வாகனத்தை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மின்கம்பம் முற்றிலும் உடைந்து சேதம் அடைந்தது. இதில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த வேன் டிரைவர், அரசு பள்ளி மாணவிகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். குறுகிய சாலையில் பள்ளி வேன் டிரைவர் செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மின் கம்பத்தில் மோதியவுடன் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும்
அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த
பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.