தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோயிலில் RSSன் பிரார்த்தனைப் பாடல் - கேரள காங்கிரஸ் கட்சி கண்டனம்!
திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் கொட்டுக்கலில் உள்ள ஒரு கோயிலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் "கான கீதம்" (பிரார்த்தனை பாடல்) இடம்பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. கொட்டுக்கலில் உள்ள கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழாவில் ஆர்.எஸ்.எஸ்.இன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பாடு செய்யப்பட்ட 'கான மேளா' (இசை கச்சேரி) நிகழ்ச்சியின் போது, தொழில்முறை இசைக் குழுவினர்களால் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. சர்ச்சை எழுந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியதை தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினரின் கூற்றுப்படி, திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கொடிகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோயில் திருவிழாவின் போது 'ஆர்.எஸ்.எஸ். கானகீதம்' பாடலைப் பாடுவது கவலைக்குரிய ஒன்று என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் கோயில்களில் விதிமீறல் நடந்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை, கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.