“ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்” - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர மாநாடு இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார். தொடர்ந்து,
"மத்திய அரசுகள் (வெவ்வேறு காலகட்டங்களில்) எடுத்த பல முடிவுகளில் தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ?, அதை இந்தியா நாளை நினைக்கும். இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே. அமைப்பு (organisational) வலிமையைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் நாட்டின் வலிமையான கட்சிகளில் ஒன்றாகும்.
கடந்த 43 வருடங்களாக தெலுங்குதேசம் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த கட்சி அவ்வளவுதான் (அழிந்து விட்டது) என ஏராளமானோர் கூறினர். ஆனால், தெலுங்குதேசம் கட்சியின் கொடி எப்போதும் உயரே பறந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் பிரதமர் மோடியிடம் அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுக்கொண்டு டிஜிட்டல் கரன்சி முறையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.
"பழைய ரூ.500, ரூ. 1,000 நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூ. 2,000 நோட்டுகளை கொண்டுவந்துள்ளீர்கள். தேவைப்பட்டால் அதிக மதிப்பிலான அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். அதற்கு பதிலாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள், இதனால் கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம்” என்று பிரதமரிடம் கூறினேன்.
இன்று, இந்தக் கூட்டத்தில் நான் அதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். பல நாடுகள் டிஜிட்டல் கரன்சியை மாற்றியமைத்துள்ளன. இன்று, கட்சிக்கு (TDP) நன்கொடைகளை உங்கள் தொலைபேசிகள் மூலம் டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். ரூ.500, 1000 மற்றும் 2000 நோட்டுகள் தேவையில்லை. அரசியலில், வாக்குகளைப் பெற பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கான சேவையை நமது இறுதி இலக்காகக் கொள்ள வேண்டும். நாம் திறமையாக உழைத்தால், மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்.
அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற வலியுறுத்திய எனது முடிவுக்கு நீங்களும் ஆதரவு தரவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் ஊழல் முடிவுக்கு வரும்” என தெரிவித்தார்.