ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!
ரூ. 4 கோடி பணம் சிக்கிய வழக்கில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என தெரியவந்தது.
இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, தாம்பரம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நயினார் நாகேந்திரனின் பணம் தான் என முதற்கட்ட தகவல் வெளியானது. முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளா் ராகவன் அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.