மணிப்பூரில் மீண்டும் வன்முறை... 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்...
மணிப்பூரில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், வன்முறையை தடுக்க 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையேயான கலவரங்கள் தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தௌபல் மாவட்டம் லிலோங் சிங்ஜாவ் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆவேசமடைந்த மக்கள் மூன்று கார்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காவல் துறையை சேர்ந்த மூவரும் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிர் சேதத்தை தடுக்கும் பொருட்டு தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல் செய்துள்ளது அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இச்சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளதாவது;
“இந்தச் சம்பவத்தை அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மணிப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி அளிக்கிறேன். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்” என அவர் கூறியுள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல மக்கள் தங்களது வீடுகளை இழந்து அகதிகளாகி வாழ்ந்து வருகின்றனர்.