இந்தியாவில் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதால் வருவாய் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்!
இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன்படி, "கடந்த 2024ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2.5 டிரில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது.
தொலைக்காட்சியைவிட டிஜிட்டல் மீடியா அதிக வளர்ச்சி பெற்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 3.3 சதவிகித வளர்ச்சியாக இருந்தாலும், விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில் 8.3 சதவிகித வேகம் குறைவுதான்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பங்களிப்பு 0.73 சதவிகிதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் 1.1 டிரில்லியன் மணிநேரங்களை செலவிட்டனர்.
இந்த 1.1 டிரில்லியன் மணிநேரங்களில் 70 சதவிகிதம், சமூக ஊடகங்கள், கேமிங், விடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என சராசரியாக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாக, டிஜிட்டல் விளம்பரம் 17 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 70,000 கோடியை எட்டியது. இது, மொத்த விளம்பர வருவாயில் 55 சதவிகிதம்.
2024ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக மந்த நிலை இருந்தாலும், விளம்பர வருவாய் 8.1 சதவிகிதம் அதிகரித்தது. மேலும், நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கும் துறைகளும் 15 சதவிகித வளர்ச்சியடைந்ததுடன், முதல்முறையாக ரூ.10,000 கோடியைத் தாண்டியது.
அதேபோல், 2024ம் ஆண்டு தேர்தல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்வுகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள், சர்வதேச கலைஞர்களின் பிரமாண்ட கச்சேரிகளால்தான் இந்த வருவாய் சாத்தியமானது என்கின்றனர்.
விளம்பர வருவாய் அதிகரிப்பு, நிகழ்வு வளர்ச்சி, சந்தா சரிவுகள் இருந்தாலும், 2025ஆம் ஆண்டிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2025-ல் 7.2 சதவிகித விரிவாக்கத்துடன், மொத்த தொழில் அளவை 2.68 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் கூறுகிறது.