தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதிகள் மறுசீரமைப்பால் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ‘கூட்டு நடவடிக்கை குழு’ அமைக்க தீர்மானம் நிறைவேற்றபட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அமைச்சர்கள் குழு அந்த ஏழு மாநிலங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து 22 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் வழங்க முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் இன்று(மார்ச்.11) ஒடிசா செல்லும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அங்கு உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுகின்றனர். தொடர்ந்து நாளை (மார்ச்.12) வனத்துறை அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கர்நாடகாவுக்கும், 13 ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ தெலங்கானா சென்று அங்குள்ள முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்.