For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
09:58 PM Jun 16, 2025 IST | Web Editor
டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்   ரூ 50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
Advertisement

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பெரும்பாலான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"டெல்லி, ஜங்புரா பகுதியில், மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தினை கடந்த 13-6-2025 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை நேரில் சந்தித்து வழங்கியதோடு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர்.

முதலமைச்சர் எழுதியிருந்த கடிதத்தில், பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பின்வரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி முதலமைச்சர் அவர்களை தனது கடிதத்தில் கோரியிருந்தார்.

  • பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிற்கான (EWS) அடுக்குமாடிக் குடியிருப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட உரிமை பெற்ற 189 குடும்பங்களுக்கு வழங்கிடவும், விரைவான சமூக உள்கட்டமைப்பு மற்றும் பிரத்யேகமான போக்குவரத்து சேவைகளை வழங்கிடவும் வேண்டும்.
  • மீதமுள்ள 181 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு, குடியிருப்புத் தேவைகள் மற்றும் வைப்புத்தொகை நிபந்தனைகளில் சிறப்புத் தளர்வுகளை வழங்கி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிற்கான (EWS) வீடுகளைப் பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்திட வேண்டும்.
  • G-7-ல் தற்காலிக டெல்லி தமிழ்க் கல்விச் சங்கத்தின் (Delhi Tamil Education Association-DTEA) பள்ளியை அனுமதிப்பதன் மூலம் தற்காலிக தமிழ் வழிப் பள்ளியை நிறுவுதல், உடனடி சேர்க்கை மற்றும் சிறப்புப் போக்குவரத்து வசதிகளுடன் அல்லது நிரந்தர வசதிகள் தயாராகும் வரை ஒதுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் இடைக்கால போக்குவரத்து வசதியுடன் அருகிலுள்ள டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் பயிற்றுவிப்பை அங்கீகரித்தல் போன்றவற்றைச் செய்திட வேண்டும்.
  • இடம்பெயர்ந்த பெண்களுக்கு இலக்குடன் கூடிய தொழில் பயிற்சி மற்றும் குறு நிறுவன மானியங்கள் மூலம் வாழ்வாதார ஆதரவைத் திரட்டிட வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், டெல்லி நிருவாகம் இந்தப் பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுகி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், இடம்பெயர்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் சுமூகமான, கண்ணியமான மறுவாழ்வை உறுதி செய்வதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு அரசு உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா 8 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிடவும் ஏதுவாக, இன்று (16-6-2025) முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement