For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் | தொடர் பெய்து வரும் கனமழையால் முற்றிலும் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!...

07:00 AM Dec 18, 2023 IST | Web Editor
தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்   தொடர் பெய்து வரும் கனமழையால் முற்றிலும் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை
Advertisement

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திசையன்விளை பஜார் பகுதியில் முறையான மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழை நீர் புகுந்து பாதிப்புக்குள்ளாக்கியது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள உப்பாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் தரைபாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் சிதம்பரபுரம், கீழக்கருவேலங்குளம், மேலகருவேலங்குளம் ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நெல்லை காவல் சரக காவல் துணை தலைவர் பிரவேஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு இருப்பிடத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் மாநகராட்சி மற்றும் வருவாய் துறை இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, ஆறுமுகநேரி, மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊட்டுவாழ் மடம், பாறைக்கமடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ரயில்வே காலனி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Advertisement