நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் - வானிலை மையம் அறிவிப்பு!
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இதனை தொடர்ந்து மிக கனமழை பெய்யும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.