ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டின் இறுதி நாளாக இருப்பதால் இன்று வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
முன்னதாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும் என ஆர்பிஐ அறிவித்திருந்தாலும், கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும். அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும். மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான வங்கி சேவைகள் இன்று இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.