#RainAlert | வீட்டிலேயே இருங்க... அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க போகும் மழை!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகமெடுத்துள்ளது. அதன்படி, ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரி பகுதிகளுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.