Rain Alert | மக்களே உஷார்... மாலை 4 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நேற்று (29-05-2025) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்துக்கும் இடையே நேற்று கரையைக் கடந்தது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் வரும் 4ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிள் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.