ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - போதை ஆசாமியை கைது செய்த ரயில்வே போலீஸ்!
ஈரோடு மாவட்டம் பழைய கரூர் ரோடைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் ஒருவர், துாத்துக்குடியில் உள்ள தனியார் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என அவரது குடும்பத்தினர் ஈரோட்டிற்கு அழைத்தனர்.
அப்பெண்ணும் திடீரென அழைப்பு வந்ததால் துாத்துக்குடியிலிருந்து
ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி
பயணித்தார். ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அருப்புகோட்டையை சேர்ந்த பெயிண்ட் கடை லோடு மேன் சதீஷ்குமார் என்பவர், ஈரோடு சென்று அங்கிருந்து கோவை செல்வதற்காக ஓகா எக்ஸ்பிரஸில்
ஏறினார்.
அதிக மது போதையில் இருந்த சதீஷ்குமார் இளம்பெண்ணின் அருகே அமர்ந்திருந்தார். ரயில் கொடைரோடு அருகே வரும்போது சதீஷ்குமார், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகிலிருந்தவர்களின் உதவியோடு ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல்
கொடுக்க, இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான காவல் அதிகாரிகள் நேற்று(பிப்.09) அதிகாலை 3:30 மணிக்கு திண்டுக்கல் வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை கைது செய்தனர்.
ஏற்கெனவே சில தினங்களுக்கு முன் ரயிலில் ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலுார் அருகே பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் தற்போது திண்டுக்கல்லில்
இளம்பெண்ணுக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.