புனே பாலம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு - தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரபலமான சுற்றுலா தளமாக உள்ள குண்ட்மலா பகுதியில் ஓடும் இந்திராயானி ஆற்றின்குறுக்கே 30 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் உள்ளது. இந்த இரும்பு பாலத்தில் நேற்று (ஜூன்.15) ஞாயிறு விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடி பாலத்தில் இருந்தவாறு ஆற்றை பார்வையிட்டுள்ளனர். அந்த நேரத்தில் தீடீரென பாலம் இடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 4 பேர நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் 32 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள தலேகாவ் அருகே இந்திராயானி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும். இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.