For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுவை அரசு மது விலக்கு மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

புதுவையில் மதுக்கடைகளை மூடி மது விலக்கு நோக்கியப் பயணத்தை தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
07:24 PM Sep 09, 2025 IST | Web Editor
புதுவையில் மதுக்கடைகளை மூடி மது விலக்கு நோக்கியப் பயணத்தை தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு மது விலக்கு  மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்    அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தல்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

”புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக் கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இன்னொருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களும் மது அருந்த தூண்டப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் புதுச்சேரியில் தெருவுக்கு 4 மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டிருப்பது தான். அதிலும் குறிப்பாக ரெஸ்டோ பார்கள் என்ற பெயரில் குடிப்பகத்துடன் கூடிய மதுக்கடைகள் மூலைக்கு மூலை திறக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் பெருகி விட்டன.

குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன. இதனால் புதுவை அதன் இயல்பிலிருந்து மாறி பெரும் கலாச்சாரச் சீரழிவை சந்தித்து வருகிறது. புதுச்சேரி படிப்படியாக கோவாவைப் போல மாறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புதுவை இந்தியாவின் போதை தலைநகராக மாறிவிடும்.

புதுச்சேரியின் இந்த சீரழிவுகளுக்கு காரணம் அங்கு அளவில்லாமல் திறக்கப்படும் மதுக்கடைகள் தான். எஃப்.எல் 1, எஃப்.எல் 2 ஆகிய பெயர்களில் மதுக்கடைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எஃப்.எல் 1 என்பது மொத்த வணிகத்திற்கான உரிமம் ஆகும். எஃப்.எல் 2 சில்லறை வணிகத்திற்கான உரிமம். இதில் ரெஸ்டோ பார் எனப்படும் குடிப்பகங்களுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது.  அதனால், புதுவையில் மது வெள்ளமாக ஓடுகிறது; சீரழிவுகள் பூகம்பமாக வெடிக்கின்றன.

புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் இன்றைய நிலையில், 86 மொத்த வணிகக் கடைகள், 240 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 476 சில்லறை வணிகக் கடைகள், 107 சாராயக் கடைகள், 81 கள்ளுக்கடைகள் என மொத்தம் 750 போதை பானக்கடைகள் உள்ளன. புதுவையின் மக்கள்தொகையான 13.94 லட்சத்துடன் ஒப்பிடும் போது 1859 பேருக்கு ஒரு போதைபானக் கடைகள் உள்ளன. புதுச்சேரி நகரத்தில் மட்டும் போதைபானக்கடைகள் உள்ளன. இது 1772 பேருக்கு ஒரு கடையாகும். காரைக்காலில் இன்னும் குறைவாக 1516 பேருக்கு ஓர் போதைபானக் கடை உள்ளது. கோவாவில் 250 பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக மதுக்கடைகள் உள்ள மாநிலமாக புதுவை தான் திகழ்கிகிறது.அண்மைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு வகுப்புகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

இதை உணர்ந்து புதுவை மாநிலத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக புதுவையில் இனி புதிய மது ஆலைகளுக்கோ, மதுக்கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்படாது என்று புதுவை அரசு அறிவிக்க வேண்டும். அதன்பின் இப்போது இருக்கும் மதுக்கடைகள், குடிப்பகங்கள் ஆகியவற்றை படிப்படியாக மூட வேண்டும். புதுவையிலும் மது விலக்கு என்ற இலக்கை நோக்கியப் பயணத்தை அம்மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement