இனி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை : காவல் ஆணையர் அருண் உத்தரவு!
சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்திற்கு மாற்று இடமாக சென்னை D1 திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணின் இந்த உத்தரவை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.