போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராணிப்பேட்டை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது பொங்கல் வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பொங்கல் வேட்டி சேலை வழங்குவது குறித்து சட்டசபையில் ஆண்டுதோறும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்படும் வேட்டி, சேலை தரமானதாக உள்ளது. அதை பொதுமக்கள் பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றனர். இது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என்று கூறியவர் சில அவதூரு வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
இதற்கு அமைச்சர் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.எல்.ஏவுமான ரவி அறிக்கை விடுத்திருந்தார். மேலும் மன்னிப்பு கேட்காவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அதையும் மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இடைத்தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி உள்ளிட்ட 110 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது