"மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியில் திட்டங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், "கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம். ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை. இது வேதனை அளிக்கிறது.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும்" என்று கூறினார். தொடர்ந்து மீனவர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.
மீனவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து அவர் பேசியதாவது,
- "மீன் பிடித்தல், பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உகரணங்கள் அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமார் 2,500 மீனவ குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.9.90 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
- சுமார் 15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க ரூ.20.52 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்
- மீன் வளம் சார்ந்த வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுது பார்த்தல், படகு கட்டுமான தொழில், படகு பழுது பார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றை செய்ய ரூ.54.48 கோடி செலவில் 20,100 மீனவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- மீன்வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர குறிப்பாக காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டு முறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகு கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய சுமார் 14,700 பயனாளிகளுக்கு ரூ.53.62 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்
- தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளும், அரசுத் துறைகளும் இத்திட்டங்களை செயல்படுத்தும்
- இந்த திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் திட்ட செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்து மேம்படுத்தும் பொருட்டு இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் ரூ.360 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.216.73 கோடி செலவிடப்படும். மொத்தம் ரூ.576.73 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் பெரிதும் பயன்படுவார்கள், அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.