புரோ கபடி லீக் - மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்
புரோ கபடி லீக் போட்டியின் 12-வது சீசன் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. முதல் கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்தன. இந்த நிலையில் 3 வது சுற்று போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புரோ கபடி லீக் போட்டிகள் சென்னையில் நடக்கிறது.
இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் யுபி யோதாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அக்டோபர் 1-ம் தேதி யு மும்பாவுடன் மோதுகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இங்கு மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
புள்ளிபட்டியலில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பால்டன் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியை தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.