மார்ச் 13-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி?
மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்க வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடுத்த வாரம் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய வந்தே பாரத் ரயில்களை சுழற்சி முறையில் அந்தந்த ரயில் வாரியங்களுக்கு இந்திய ரயில்வே ஒதுக்கி வருகிறது.
அந்த வகையில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரயிலை மதுரை முதல் பெங்களூருக்கு இடையே அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த வாரத்தில் மதுரை-பெங்களூரு இடையே பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் தமிழ்நாட்டில் நடைபெறும் பாஜக பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் சென்னையிலிருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது. மேலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரை ஒரு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.