முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினரால் வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தனது பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். இதனிடையே திமுக அமைச்சர்கள், இந்தியா கூட்டணி எம்பி-க்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.