உலகின் மிக உயரமான ரயில் பாலம்... செனாப் பாலத்தை ஜூன் 6-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
உலகின் மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை வரும் 6ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவு பாலமாகும். இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமும் கொண்டது.
ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி ரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்ட இந்தப் பாலம், இது 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகவும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,315 மீ நீளமுள்ள இந்தப் பாலம், மணிக்கு 260 கிமீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையிலும், அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்களைத் தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செனாப் நதியின் நீர் ஓட்டத்தைத் தடுக்காமல் பாலத்தைக் கட்டியது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. மேலும் சாலை இணைப்பு இல்லாததால், கனரக இயந்திரங்கள் மற்றும் பொருட்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்வது மற்றொரு பெரிய சவாலாக இருந்தததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.