இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது.
அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவை இன்று (ஏப்.5) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா - இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கைெயழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
கொழும்புக்கு வருகைதந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். pic.twitter.com/SkBJW05psQ
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். அத்துடன் சமூக வரவேற்பின்போது மகாபுருஷர் ஶ்ரீமந்த சங்கரதேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதப்தேவ் ஆகியோரின் சிந்தனைகளின் மொழிபெயர்ப்புகள் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகள் மற்றும் பாளி மொழியிலான கீத கோவிந்தத்தின் சில அத்தியாயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட முடிந்தது.
இந்த கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்! சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள். கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.