அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சட்ட அங்கீகாரத்துடன் தங்கி உள்ள 5 லட்சம் வௌிநாட்டவர்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாக மற்றும் பிற அரசியல் காரணங்களுக்காக பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, நிகாராகுவா, ஹைதி, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் அமெரிக்காவில் சட்ட அங்கீகாரத்துடன் வசித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சட்ட அங்கீகாரத்துடன் அமெரிக்காவில் வசிக்க முந்தைய ஜோ பைடன் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் கியூபா, நிகாராகுவா, ஹைதி மற்றும் வெனிசுலா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சிஎச்என்வி திட்டத்தின் கீழ் பைடன் நிர்வாகம் வழங்கிய சட்ட அங்கீகாரத்தை திரும்ப பெற டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி கியூபா, ஹைதி, வெனிசுலா மற்றும் நிகாராகுவா உள்பட 5,32,000 பேருடைய சட்ட அங்கீகாரம் திரும்ப பெறப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் ஏப்ரல் 24ம் தேதிக்கு பின் அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழக்கின்றனர். எனவே ஏப்ரல் 24ம் தேதிக்குள் தாமாக தங்களின் நாடுகளுக்கு திரும்பாவிட்டால் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.