ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனாவுக்கு பரஸ்பர வரி - அதிபர் டிரம்ப் அறிவிப்பு !
அமெரிக்காவின் 47 வது அதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது,
பல ஆண்டுகளாக மற்ற நாடுகள் நமது நாட்டுக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிக அளவில் வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. இந்தியா நம்மிடம் 100 சதவீதக்கும் அதிகமான வரிகளை வசூலிக்கிறது.
தென் கொரியாவிற்கு நாம் இராணுவ ரீதியாகவும், வேறு பல வழிகளிலும் ஏராளமான உதவிகளை வழங்குகிறோம். ஆனால் அவர்கள் அதிகமான வரிகளை விதிக்கிறார்கள். நாம் தயாரித்த பொருட்களுக்கு சீனா 2 மடங்கு வரியை வசூலிக்கிறது. தென்கொரியா 4 மடங்கு வசூலிக்கிறது.
ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமலுக்கு வரும். அவர்கள் நம் மீது என்ன வரி விதித்தாலும், மற்ற நாடுகளுக்கு நாம் வரி விதிப்போம். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டினாலும் நாம் பல தசாப்தங்களாக ஏமாற்றப்பட்டு வருகிறோம், இனி அது நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இந்த நடவடிக்கை சில பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அமெரிக்க தொழில்களை பாதுகாக்க இது ஒரு அவசியமான நடவடிக்கை ஆகும். அதிகப்படியான வரிவிதிப்புகளால் சிறிது இடையூறுகள் இருக்கும். ஆனால் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அது பெரிய விஷயமாக இருக்காது. அதிக்கப்படியான வரிகள் டிரில்லியன் டாலர்களை உருவாக்கும்". இவ்வாறு அவர் கூறினார்.