For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் அறிக்கை தயாரிப்பு - நாளை சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது அதிமுக!

12:53 PM Feb 04, 2024 IST | Web Editor
தேர்தல் அறிக்கை தயாரிப்பு   நாளை சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது அதிமுக
Advertisement

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை சுற்று பயணத்தை தொடங்க உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது.

Advertisement

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும்  தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாகி வருகின்றன. அந்த வகையில், அதிமுக தரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நாளை சுற்று பயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பொன்னையன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மண்டல வாரியாக மக்களை நேரில் சந்தித்து, மக்கள் பிரச்னைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளது. பொதுநல அமைப்புகள், கட்சி சார் அமைப்புகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு தலைசிறந்த சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுச்செயலாளர் ஆணையிட்டார். அந்த அடிப்படையில் இதுவரை எந்த கட்சியும் தயாரிக்காத அளவு சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

இந்தத் தேர்தல் அறிக்கை கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கொரியர் அல்லது ஈமெயில் மூலமாகவும் தலைமை கழகத்திற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.  விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்தும், பொதுமக்களுக்கு விளம்பரம் படுத்தும் வகையில் அதிமுக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது;

பயண திட்டத்தின் படி நாளை முதல் தேர்தல் அறிக்கை தயாரிக்கு சுற்றுப் பயணம் தொடங்குகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களும் கூட தங்கள் கருத்துக்களை இமெயில் அல்லது கொரியர் மூலம் அதிமுக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனைத்து பகுதிகளுக்கும் 10 பேர் கொண்ட குழு நேரில் சென்று கருத்துகளை கேட்டு பெறும். மக்கள் கருத்துக்களை அந்தந்த மாவட்ட ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

கருத்து தெரிவிப்பவர்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் நலமாக இருக்கும் என்பது எங்கள் கோரிக்கை. பாஜக இல்லாத மற்ற கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்தால் வரவேற்கப்படும் என தெரிவித்தார்.

Tags :
Advertisement