“இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!
சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே நடைபெற்று வரும் மெட்ரோப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“கருணாநிதி முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள், தற்போதைய நமது திமுக அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம்.
அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட மத்திய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம். 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, @cmrlofficial நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!
நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.