“அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான்” - மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களைவைத் தேர்தல் வருகிற ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்., எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் மாநிலங்களை உறுப்பினர் வேட்பாளராக இன்று(ஜூன்.01) அறிவிக்கப்பட்டனர்.
ஏற்கெனெவே தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களை சீட்டை அதிமுக ஒதுக்குவதாக அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார். இந்த நிலையில் இது குறித்து தற்போது பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “ திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2026-ல் மாநிலங்களை சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கி தரப்படும் என அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலின்போதே ஒரு மாநிலங்களை சீட் உறுதிசெய்யப்பட்டது. இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. வாய் வழியாக மட்டுமின்றி எழுத்துப் பூர்வமாக தந்தது உண்மைதான்.
இதை இவ்வளவு நாட்கள் நாங்கள் சொல்லாததற்கு காரணம் அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக உள்ளது. ஏற்கெனவே அன்புமணிக்கும், ஜி.கே. வாசனுக்கும் அதிமுக தரப்பில் ராஜ்ய சபா சீட் தரப்பட்டது. இந்த முறை தேமுதிகவுக்கு மாநிலங்களை சீட் ஒதுக்கப்படுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதுதான். இன்றைக்கு அதிமுக அதை அறிவித்து தனது கடமையை நிறைவேற்றியிருக்கிறது. அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான். அதனால் தான் 2026 தேர்தலையொட்டி ராஜ்ய சபா சீட் தரப்பட்டுள்ளது. அதிமுக தனது கடமையை நிறைவேற்றியதுபோல் 2026ல் தேமுதிக சார்பில் கடமையை நிறைவேற்றுவோம்”