கணவன் கண்முன்னே மனைவிக்கு பிளைன் கிஸ் கொடுத்த காவலர் - தர்மடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு!
சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது 33). இவர் தனது கணவர் கௌரிசங்கருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் வழியாக சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ் என்பவர்
தொடர்ந்து ஹாரன் அடித்துக் தொந்தரவு செய்துள்ளார்.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த தினேஷ் ஒரு கட்டத்தில் திவ்யாவை பார்த்து பிளைன் கிஸ் கொடுப்பது போல செய்கை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவ்யா அருகில் இருந்த ஓட்டேரி காவல் நிலையத்தில் தனது கணவருடன் சேர்ந்து தினேஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அப்போது திவ்யாவின் கணவர் கௌரிசங்கர் தினேஷை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணையில் தினேஷ் ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு பிளைன் கிஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து திவ்யா ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில் காவலர் தினேஷ் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் தினேஷை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது தொடர்பாக திவ்யாவின் கணவர் கௌரிசங்கர் மீது காவலர் தினேஷ் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் மீதும் வழக்கு பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.