மும்பையில் இன்று முதல் ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை - காவல்துறை உத்தரவு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது.
இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் துணை பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பிரஹன் மும்பை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளைப் வெடிக்க மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது. அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் காரணமாக மே 11, 2025 (இன்று) முதல் ஜூன் 9, 2025 வரை எந்தவொரு நபரும் பிரஹன் மும்பை எல்லைக்குள் எந்த இடத்திலும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.