அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்பு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த அமர்வில் இடம்பெற்ற மற்றொரு நீதிபதி கே.விஸ்வநாதன் கூறுகையில், “தான் வழக்கறிஞராக இருந்த போது இந்த வழக்கில் ஒரு நபருக்கு ஆஜராகி உள்ளேன். இதனால் இந்த வழக்கை தான் விசாரணை செய்ய முடியாது. இந்த வழக்கு வேறு நீதிபதி அடங்கிய அமர்வு முன் பட்டியலிட பரிந்துரைக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.